"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
5/3/16

ஜூலை 2015ல் குறிப்பிட்ட இரு தனியார் நிறுவனத்துடன் 648 மெகாவாட் சூரிய மின்சாரம் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் போட்டது முதலே இத்திட்டம் குறித்து எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. புதிதாக எழுந்துள்ள சர்ச்சை, குற்றச்சாட்டுகளை உண்மையாக்கும் விதத்தில் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

ஜூலை 4,2015 அன்று அந்த தனியார் குழுமத்துடன் ரூ.4536 கோடி செலவில், ஒரு யூனிட் ரூ.7.01 என்ற கணக்கில் 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் மத்திய பிரதேச அரசு இது போன்ற ஒப்பந்தத்தை இறுதி செய்த போதுதான் குற்றச்சாட்டு எழுந்தது.

காரணம் அந்த அரசுக்கு அந்த தனியார் நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6.04 விலையில் வழங்க ஒப்புக் கொண்டிருந்தது. இதை நிராகரித்த ம.பி., அரசு மொரீஷியஸ் நாட்டின் ஸ்கை பவர் நிறுவனத்தோடு யூனிட் ரூ.5.05 என்ற விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போட்டது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து கேள்விகள் எழுந்தன. ஸ்டாலின், ராமதாஸ், இளங்கோவன், தமிழிசை உள்ளிட்ட அனைவரும் குற்றச்சாட்டு கூறினர். அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு ஒப்பந்தத்தை செயல்படுத்தியது தமிழக அரசு.

இதன் பின் அந்த தனியார் நிறுவனம் 648 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மின்சாரப் பூங்காவை ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்க நிலங்களை வாங்கத் தொடங்கியது.

இப்படி நிலம் வாங்குவதில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இடைத்தரகர்கள் இடையில் புகுந்து குறைந்த விலைக்கு நிலத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கி அந்த தனியார் நிறுவனத்துக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. என்றாலும் இதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஆனால், சில நாட்களுக்கு முன் தனியார் நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஒன்று, இந்த குற்றச்சாட்டுகளை மெய்பிக்கும் விதமாக உள்ளது. அந்த தனியார் நிறுவனத்தின் சார்பாக நில ஆவணங்களை சரிபார்க்கும் பொருட்டு ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருந்தார்.

அந்த வழக்கறிஞர் குறிப்பிட்ட அந்த தனியார் நிறுவனம் தொடர்பாக எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் சார்பாக தடை உத்தரவு வாங்கினார்.

இதன் பின்னணி என்ன? விசாரித்தபோது பல தகவல்கள் கிடைப்பதாக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். அதாவது அந்த தனியார் நிறுவனம் சார்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வாங்கப்படும் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.6 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.

இக்கட்டணத்தின் அடிப்படையில் அந்த வழக்கறிஞருக்கு அந்த தனியார் நிறுவனம் ரூ.70 லட்சத்தை இதுவரை அளித்திருக்கிறது. இந்த நிலையில் அந்த தனியார் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில், ஒரு ஏக்கர் நிலத்துக்கு ரூ.15 ஆயிரம் வேண்டும். அப்படி தரத் தயங்கினால் அந்த தனியார் நிறுவனம் அமைக்கும் சூரிய ஒளி மின் பூங்காக்கள் குறித்த பல்வேறு தகவல்களை வெளியிடுவேன். அப்படி வெளியிட்டால் அந்த தனியார் நிறுவனம் தமிழகத்தில் அமைக்கும் சூரிய ஒளி மின் பூங்கா திட்டத்தையே கைவிட வேண்டும்…

என்று அந்த வழக்கறிஞர் கடிதம் எழுதியுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆக, சூரிய ஒளி மின் பூங்கா அமைப்பதற்காக நிலம் வாங்கியதில் பல்வேறு சட்டவிரோதமான நடவடிக்கைகள் நடந்துள்ளன. மின்சாரம் வாங்குவதற்காக தமிழக மின் வாரியத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பல்வேறு சட்டவிரோதமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டவிரோதமான ஆவணங்களின் அடிப்படையிலேயே ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலைக்கு அந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்க தமிழக அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்தஸ் இந்த் வங்கியில் இருந்து ரூ.2303.98 கோடி; ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் இருந்து ரூபாய் ஆயிரம் கோடி; யெஸ் பாங்கிலிருந்து ரூபாய் ஐநூறு கோடி மற்றும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கியில் இருந்து ரூ.803.98 கோடி கடன் பெற்றுள்ளது அந்த தனியார் நிறுவனம்.

இப்படி கடன் பெற்றதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சொல்கிறார்கள். செபி விதிகள், ஒப்பந்த விதிகள் போன்ற பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளன. இந்த விதிமீறல்கள் எல்லாம் ஒரு துளி மட்டுமே. தமிழக மின் வாரியம், இதர அரசுத்துறைகள், பொது நல வழக்கு தொடுக்கும் சமூக ஆர்வலர்கள், ஊடகங்கள் போன்றவற்றுக்கு இந்தத் தகவல் தெரிந்தால், அந்த தனியார் நிறுவனம் தமிழக அரசோடு செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்யும் நிலை ஏற்படும்.

அதன் விளைவாக நீதிமன்றத்தில் நிலம் வாங்கியது தொடர்பான பல வழக்குகள், பாதிக்கப்பட்ட நபர்கள் தொடரும் வழக்குகள் போன்றவை தொடுக்கப்படலாம். அந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதன் நிர்வாகத்தின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படலாம். போலியான மற்றும் சட்டவிரோதமான ஆவணங்களை அளித்து தமிழக மின் வாரியத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டதற்காக அந்த தனியார் நிறுவனத்தில் மூத்த அதிகாரிகள் மீது விசாரணை வரலாம். இதன் விளைவாக ஒப்பந்தமே ரத்து செய்யப்படலாம்.

தவிர போலியான ஆவணங்கள் கொடுத்து கடன் பெற்றதற்காக கடன் அளித்த வங்கிகள் அந்த தனியார் நிறுவனத்தின் மீது புகார் அளித்து வழக்கு பதிவு செய்யலாம். இந்த ஒப்பந்தம் தொடர்பான பல தகவல்களை வெளியில் சொல்லவில்லை என்ற காரணத்துக்காக செபி, அந்த தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கூடவே இதை மூடி மறைக்கவும் முடியாது. ஒரு சாதாரண பூர்வாங்க விசாரணை நடத்தினாலே தமிழக மின் வாரியத்தை அந்த தனியார் நிறுவனம் எப்படி ஏமாற்றியிருக்கிறது என்பது தெரிந்து விடும் என்றும் அடித்துச் சொல்கிறார்கள்.

மேலே இதுவரை சொல்லப்பட்ட தகவல்களை தொகுத்து ஒரு கடிதமாக எழுதி அந்த தனியார் நிறுவனத்துக்கு அந்த வழக்கறிஞர் அனுப்பியிருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த வழக்கறிஞர் தங்களை ப்ளாக் மெயில் செய்வதாகவும், அவர் தங்கள் நிறுவனம் தொடர்பான எந்த ரகசியங்களையும் எந்த விதத்திலும் வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த தனியார் நிறுவனம் வழக்கு தொடுத்திருக்கிறது.

இதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அந்த தனியார் நிறுவனம் அமைக்க இருக்கும் சூரிய ஒளி மின் பூங்கா திட்டம் தொடர்பாக எந்த விதமான தகவல்களையும் அந்த வழக்கறிஞர் பிறப்பிக்கக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார். இந்த வழக்கு மீண்டும் இந்த மாதம் இரண்டாவது வாரத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இப்போது எதிர்கட்சிகள் இதைத்தான் கையில் எடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கறிஞர் ப்ளாக் மெயில் செய்தாரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். அவர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளும், அவை வெளியாகி விடுமோ என்ற அச்சத்தில் அந்த தனியார் நிறுவனம் அவசர அவசரமாக நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றதும் பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது என்கிறார்கள்.

கூடவே இந்த ஒப்பந்தம் நடந்தபோதே, அடுத்த 25 ஆண்டுகளில் தமிழக அரசு ரூ.23 ஆயிரம் கோடி இழப்பை சந்திக்கும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக இருந்த ஓர் அதிகாரி சுட்டிக்காட்டியதையும் குறிப்பிடுகிறார்கள். தேர்தல் சமயத்தில் இந்த ஊழல் வழக்கு சூடு பிடிக்கும். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் புதிய அரசுக்கு இந்த சூரிய மின்சார ஒப்பந்த விசாரணையே முதன்மையாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.